குழந்தைகளின் கண்திறனை பாதிக்கும் முப்பரிமாண 3டி படங்கள்

முப்பரிமாண 3டி படங்களை ஆறு வயதிற்கும் குறைவான பிள்ளைகள் பார்க்க அனுமதிக்கக்கூடாது என,

பிரான்ஸின் மக்கள் ஆரோக்கிய கண்காணிப்பு அமைப்பான அன்செஸ் பரிந்துரைத்துள்ளது.
வளர்ந்து வருகின்ற குழந்தைகளின் கண்களில் முப்பரிமாணப் படங்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் பற்றி ஆராய்ந்த அன்செஸ் இந்தப் பரிந்துரையைச் செய்துள்ளது.
ஒரு முப்பரிமாண படத்தில் இரண்டு வெவ்வேறு இடங்களை நம் கண்கள் ஒரே நேரத்தில் பார்க்க வேண்டும். அதன் பின்னர் தான், நமது மூளை அதனை ஒரே படமாக புரிந்துகொள்ளும். இவ்வாறாகத் தான் முப்பரிமாண படங்களை நாம் புரிந்து கொள்கிறோம்.
ஆறு வயதுக்கு குறைவான குழந்தைகளின் கண்கள் முழுமையான வளர்ச்சி அடைந்திருக்காத சூழ்நிலையில், முப்பரிமாணப் படங்களைப் பார்க்கும்போது அவர்களுக்கு அப்படங்களை புரிந்துகொள்ள அதிக சிரமமாக இருக்கும். அதனால் அவர்களின் ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கம் பெரியவர்களைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது என  அன்செஸ் கூறுகிறது.
13 வயது வரும் வரைக்கும் பிள்ளைகள் முப்பரிமாண படங்களைக் குறைவாகவே பார்க்க அனுமதிக்கப்பட வேண்டும் என உணவு, சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்புக்கான இந்த பிரான்ஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
சிறுவர்களுக்கான படங்கள் அதிக அளவில் முப்பரிமாண தொழில்நுட்பத்தில் வெளிவருகின்ற ஒரு காலகட்டம் இது. வீடியோ கேம்கள், தொலைக்காட்சிகள், கணினித் திரைகள் என்று எல்லாவற்றிலும் முப்பரிமாணத் திரை வந்துவிட்டது.
தற்போது, அதிக நிறுவனங்கள் முப்பரிமாணப் படங்களுக்கான கருவிகளை உருவாக்கி வருகின்றன.
ஆப்பிள் நிறுவனம் கண்ணாடி அணியாமலேயே முப்பரிமாணப் படங்களைப் பார்க்க உதவுகிற திரை ஒன்றை உருவாக்கி வருவதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன.
ஏற்கெனவே, இத்தாலியில் இளம் பிள்ளைகள் முப்பரிமாணப் படங்களைப் பார்ப்பதற்குரிய கண்ணாடிகளை அணிவதில் கட்டுப்பாடுகள் உள்ளன. அந்த நாட்டின் சுகாதார கண்காணிப்பு நிறுவனம் எச்சரித்ததை அடுத்து இந்த கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது.
நிண்டெண்டோ என்ற வீடியோ கேம் நிறுவனம் 2010இல் ஒரு புதிய முப்பரிமாண கருவியை அறிமுகப்படுத்திய போது, ஆறு வயதுக்கும் குறைவான பிள்ளைகள் அவற்றைப் பயன்படுத்தினால் அவர்களின் பார்வைத்திறன் பாதிக்கப்படலாம் என எச்சரித்தது.
அதேநேரம், முப்பரிமாணப் படங்களைப் பார்த்ததன் விளைவாக பார்வைத் திறன் கெட்டுப்போனதாக தங்களிடம் புகார்கள் வந்ததில்லை என அமெரிக்க கண்திறன் சங்கம் கூறியுள்ளது.