தனது மகளை ஐந்து வருடங்களுக்கு மேலாக அச்சுறுத்தி பாலியல் வல்லுறவிற்குட்படுத்தி வந்த முன்னாள் இராணுவ வீரரான தந்தை ஒருவரை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை கம்பளை மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். கம்பளை போவலை பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, சந்தேக நபரின் முதல் மனைவி வெளிநாடு சென்றிருந்த நிலையில் அப்போது 12 வயது சிறுமியாக இருந்த பாதிக்கப்பட்ட 17 வயதுப் பெண் சந்தேக நபரினால் தொடர்ந்து வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளதாகவும்
அக்காலப் பகுதியில் ஒருமுறை மேற்படி சிறுமி கர்ப்பமுற்றதனையத்து சந்தேக நபர் 18 ஆயிரம் ரூபா கொடுத்து சட்டவிரோத கருக் கலைப்பு நிலையமொன்றில் கருக்கலைப்புச் செய்ததாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதுடன் சந்தேக நபர் மனைவி வெளிநாடு சென்றதன் பின்னர் மாவனெல்லை பகுதியில் பிறிதொரு பெண்ணை திருமணம் செய்து மூன்று குழந்தைகள் உள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
சந்தேக நபர் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்தமையினால் சகித்துக்கொள்ள முடியாது பாதிக்கப்பட்ட சிறுமி தனது பாட்டியுடன் கடந்த திங்கட்கிழமை கம்பளை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் சந்தேக நபர் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே மேற்கண்ட உத்தரவினை நீதிவான் பிறப்பித்தார்.
