மன்னாரில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் மீட்பு

மன்னார் - சின்னக்கடை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலத்தை இன்று காலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர். 


 சடலமாக மீட்கப்பட்டவர் குறித்த பகுதியைச் சேர்ந்த பி.யூட் கோடிஸ்வரன் (48) என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த நபரின் மனைவி மற்றும் பிள்ளை ஆகியோர் வெளி நாட்டில் இருப்பதாகவும் குறித்த நபரும் வெளி நாட்டில் இருந்து கடந்த 8 வருடங்களுக்கு முன் இலங்கைக்கு வந்து மன்னாரில் வசித்து வருவதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.

 பாடசாலை மாணவர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஆங்கில பாடம் கற்பித்து வந்த நிலையில் சின்னக்கடை பகுதியில் அமைந்துள்ள பொது விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தை அவதானித்த அயலவர்கள் மன்னார் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில், குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டதோடு, விசாரணைகளை மேற்கொண்டனர்.

 பொலிஸ் நாயின் உதவியுடன் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு விசேட பொலிஸ் தடவியல் நிபுனர்களும் வருகை தந்து தடயங்களை சோதனையிட்டுள்ளனர். மன்னார் நீதவான் ஆசிர்வாதம் கிரேசியன் அலெக்ஸ்ராஜா இன்று காலை 11 மணியளவில் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தை பார்வையிட்டுள்ளார்.

 அத்துடன் சடலத்தை மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்து பிரேத பரிசோதனையினை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மெற்கொண்டு வருகின்றனர்.