நான்கு பவுண் தாலிக்கொடியைத் திருடி வங்கியில் அடைவு வைத்ததாகக் கூறப்படும் 33 வயதுடைய ஒருவரை ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவன்கேணி சீநோர் வீட்டுத் திட்டப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கொம்மாதுறை வாசிகசாலை வீதியிலுள்ள வீடொன்றில்; யாருமில்லாத வேளை பார்த்து அங்கு சென்ற சந்தேக நபர், அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவனிடம் தனது சைக்கிளைக் கொடுத்து ஓடிப் பழகச் சொல்லி விட்டு வீட்டுக்குள் புகுந்து அலுமாரியைத் திறந்து அதனுள் பாதுகாப்பாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 பவுண் தாலிக்கொடியை திருடிச் சென்றுள்ளார். இதன் பின்னர் வீட்டுக்கு வந்த வீட்டு உரிமையாளர் தனது மகனிடம் நடந்ததை விசாரித்ததுடன், தாலிக்கொடி திருட்டுப் போனமை தொடர்பிலும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பொலிஸார் சந்தேக நபரை விசாரித்தபோது, அவர் திருடிச் சென்ற தாலிக்கொடியை செங்கலடியிலுள்ள வங்கியொன்றில் அடைவு வைத்திருப்பது தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சந்தேக நபரைக் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.