ஜனாதிபதி மற்றும் பிரதமர்; காணாமல்; போனவர்கள் தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்தி, காணாமல்; போனவர்களை கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும். அல்லது அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.
காமாணமல்; போனவர்களின் உறவினர்கள் வியாழக்கிழமை (04) மட்டக்களப்பு காந்தி சதுக்கத்தில் நடாத்திய கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'தற்போதைய அரசாங்கம் சுதந்திரமாக சுதந்திர தினத்தை கொண்டாடும் நிலையில், தமிழ் மக்கள் துன்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கின்றனர்.
உண்மையாக இவர்களுக்கு, தமிழர்கள் மீது நம்பிக்கை மற்றும் விசுவாசம் இருந்தால் காணாமல்; போனவர்களின் விடயத்தில் தீர்வு கொடுத்திருக்க வேண்டும். வடகிழக்கில் காணாமல்; போனவர்களின் குடும்பத்திற்கு பதில் சொல்லியாக வேண்டும். தமிழ் மக்களை சுட்டு குவித்து வெற்றி விழா கொண்டாடிய மஹிந்த ராஜபக்ஷ, கண்ணீர் வடிக்கின்றார். இது நாங்கள் வழிபடும் இறைவனின் இறைதீர்ப்பு ஆகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலகங்களிலும் இருந்து 2,200பேர் கூலிப்படைகளினாலும் கடந்த ஆட்சியாளர்களினாலும் காமாணமல் போயுள்ளார்கள். இவர்கள் கடத்தப்பட்டார்களா?,
காணாமற் செய்யப்பட்டார்களா? என சந்தேகம் கொள்ள வேண்டியுள்ளது. காணாமற் போன ஆணைக்குழு, நல்லாட்சி அரசாங்கத்தில் காணாமற்போனவர்களின் குடும்பங்களுக்கு என்ன செய்திருக்கின்றது. அவர்களின் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கியிருக்கின்றதா? இல்லை என்று தான் அனுமானம் செய்யமுடியும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமற்போனவர்களின் குடும்பத்தார்கள் ஒன்று சேர்ந்து சுமார் 2,200 விண்ணப்பங்களை காணாமற்போன ஆணைக்குழுவிற்கு விசாரணை செய்வதற்கு விண்ணப்பித்திருந்தனர். ஆணைக்குழு இதில் 425 விண்ணப்பங்களை விசாரணை செய்தது. 1,575விண்ணப்பங்கள் விசாரணை செய்யப்படவில்லை. விசாரணை செய்வதற்கு விண்ணப்பிருந்தவர்களின் விண்ணப்பங்கள் எங்கே?
விசாரணை விண்ணப்பங்கள் வாக்குச்சீட்டுப்போல் குப்பைக்குள் வீசப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எங்களுக்கு எழுகின்றது.ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய தமிழர்களுக்கு மிக விரைவில் காணாமல்; போனவர் விடயத்தில்; நீதியான தீர்வுகள் வழங்க வேண்டும்' என அவர் மேலும் தெரிவித்தார்.